இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசை எதிர்த்து, தலைநகர் ஜெருசலேமில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு ‘ஆபரேஷன் அல்-அக்ஸா’ என்ற பெயரில் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்; 250 பேர் வரை பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலளிக்க, இஸ்ரேல் அரசு கடந்த 13 மாதங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 1,00,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 100 இஸ்ரேல் கைதிகள் உள்ள நிலையில், காசாவில் உள்ள எஞ்சிய பணயக் கைதிகளை மீட்கும் ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு எட்ட வேண்டும் என்று கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் ஜெருசலேமில் நேதன்யாகு அரசை எதிர்த்து பேரணி நடத்தினர்.
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்தின் மூத்த அதிகாரிகள், இந்த மாத தொடக்கத்தில் 14 மாத கால போரை நிறுத்த தங்கள் மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்கினர். ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.